திருமாவளவன் அதிரடி... விசிக.,வில் இருந்து மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்.!
VCK executive suspended from party over police scolding
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை ஜாதி பெயர் சொல்லி திட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விசிக பிரமுகர் ஜாமினில் விடுதலையான பொழுது நடைபெற்ற ஊர்வலத்தில் தமிழக காவல்துறையினரை விசிக நிர்வாகிகள் கொச்சைப்படுத்தி கோஷம் எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட விசிக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை 13 பேரை கைது செய்தது. தலைமறைவாக உள்ள விசிக வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் பகலவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் விசிக வடக்கு மாவட்ட செயலாளர் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது பாராட்டுதலுக்குரியதே.
எனினும் கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையில் ஆன கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும். அவ்வாரின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட போக்குகள் கவலை அளிப்பதாக உள்ளன. எனவே இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மாவட்டச் செயலாளர் பகலவன் அவர்கள் மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இதுகுறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநில பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணை குழு பின்னர் நியமிக்கப்படும்" என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
VCK executive suspended from party over police scolding