காதலர் தினக் கொண்டாட்டம் vs கட்டுப்பாடுகள்…! - சென்னை முழுவதும் காவலர்கள் எச்சரிக்கை
Valentine Day celebration vs restrictions Police alert across Chennai
உலகம் முழுவதும் இன்று காதலர் தின உற்சாகம் களைகட்டிய நிலையில், சென்னை நகரமும் காதல் கொண்டாட்டங்களால் கலகலப்பாக மாறியுள்ளது. தினமும் அன்பை பகிர்ந்தாலும், இந்த ஒரு நாளை ‘ஸ்பெஷல்’ நாளாகக் கொண்டாட காதல் ஜோடிகள் ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.

அதனால் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தனியார் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் இன்றைய தினம் இளைஞர்கள் மற்றும் காதல் ஜோடிகள் அதிகளவில் திரள்வது வழக்கமாக உள்ளது.
ஆனால், காதல் புனிதமானது என்றாலும், இது பாரம்பரிய கலாசாரத்துக்கு முரணானது என சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன. காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்கள் ஆண்டுதோறும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் சென்னை மாநகர காவல்துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சுமார் 5,000 காவலர்கள் நகரம் முழுவதும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
காதல் ஜோடிகளை மிரட்டுதல் அல்லது தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதே நேரத்தில் பொதுஇடங்களில் ஒழுங்கு மீறும் செயல்களில் ஈடுபட்டாலும் சட்டப்படி நடவடிக்கை தவிர்க்க முடியாது என்றும் காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், சென்னை இன்று ஒருபுறம் காதல் கொண்டாட்டத்தின் நிறம் பூசிக்கொண்டிருக்க, மறுபுறம் பாதுகாப்பு வளையத்திலும் நகரம் இயங்குகிறது.
English Summary
Valentine Day celebration vs restrictions Police alert across Chennai