கிராமப்புறங்களில் தடையற்ற இன்டர்நெட் இணைப்பு: வரும் 11 ஆம் தேதி முதல் தொடக்கம்..?
Uninterrupted internet connectivity in rural areas to begin from the 11th
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் தோறும் அதிவேக இணைய சேவை வழங்க, பாரத் நெட் திட்டத்தில், தமிழ்நாடு பைபர் நெட் கழகம் வாயிலாக,ஆப்டிக்கல் பைபர் கேபிள் பொருத்தும் பணியும், இணைய தள சேவைக்கான உபகரணங்கள் பொருத்தும் பணியும் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பனி முடிவடைந்துள்ளதால். வரும் 11-ஆம் தேதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை தொடங்கி வைக்கவுள்ளார்.
கிராம ஊராட்சிகளில் உள்ள சேவை மையங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி மையங்கள், இதன் கட்டுப்பாடு அறையாக செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறியுள்ளதாவது:
சில ஒதுக்குப்புறமான கிராமப்புறங்களில் இன்டர்நெட் இணைப்பு சரிவர கிடைக்காததால், அங்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியவில்லை. ஆனால், இந்த திட்டத்தால் கிராம ஊராட்சிகளில் வழங்கப்படும் இன்டர்நெட் சேவையால் இக்குறை தவிர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு 'வைபை' இணைப்பு வழங்குவது, மொபைல்போன் டவர்களுக்கு இணைப்பு வழங்குவது, அலைவரிசை இணைப்புகளை 'டெண்டர்' அடிப்படையில் குத்தகைக்கு விடுவது உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வருவாய் ஈட்டக்கூடிய செயல்களையும் மேற்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், வரும் 11-ஆம் தேதி நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பர் என எதிர்பார்பதாகவும் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கேற்ப, கிராம சபை கூட்டத்தில் ஒவ்வொரு இடத்திலும் இதை ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆப்டிக்கல் பைபர் கேபிள் வாயிலாக அனைத்து ஊராட்சிகளும் இணைக்கப்படும் என்றும் இதன் வாயிலாக நிர்வாக பணிகள் எளிதாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Uninterrupted internet connectivity in rural areas to begin from the 11th