மளிகைப் பொருட்கள் விற்பனையில் வெளிப்படைத்தன்மை...! முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவுக்கு நியாயவிலைக் கடை பணியாளர்கள் நெகிழ்ச்சி நன்றி...!
Transparency sale groceries Fair price shop workers grateful decisive decision Chief Minister Vijay
தமிழகம் முழுவதும் செயல்படும் 34 ஆயிரத்து 908 நியாயவிலைக் கடைகள் மூலம் 2 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இலவச அரிசி, கோதுமை, குறைந்த விலையில் சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அதோடு மஞ்சள்தூள், சேமியா, பெருங்காயத்தூள், உப்பு, வெந்தயம், சீரகம், குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், இந்த மளிகைப் பொருட்களை கட்டாயமாக வாங்க வைப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதனால் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது.கடந்த ஆட்சிக் காலத்தில் மளிகைப் பொருட்கள் கொள்முதல் வெளிப்படைத்தன்மையின்றி நடந்ததாகவும், 'கூட்டு கொள்முதல் குழு' என்ற பெயரில் சிலருக்கே ஆதாயம் கிடைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், நியாயவிலைக் கடைகளுக்கான மளிகைப் பொருட்கள் இனி இணையவழி ஒப்பந்த முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வரவேற்று அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா. தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மளிகைப் பொருட்கள் கொள்முதல் நடைமுறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை வேண்டும், தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்று தங்கள் சங்கம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில உயரதிகாரிகளும் ஆளும் தரப்புக்கு நெருக்கமான சிலரும் இணைந்து, 'கூட்டு கொள்முதல் குழு' என்ற பெயரில் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் செயல்பட்டதாகவும், சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் மறைமுக கொள்முதல் நடைமுறைகள் நடந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக விற்பனையாகாமல் தேங்கிய பொருட்கள், காலாவதியான பொருட்கள் ஆகியவற்றின் இழப்பு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டதாகவும் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
அதிகார செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இணைந்த இந்த முறைகேடுகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு குறுகிய காலத்திலேயே முற்றுப்புள்ளி வைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்றும் சங்கம் பாராட்டியுள்ளது.கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ள இணையவழி ஒப்பந்த கொள்முதல் திட்டம் நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட்டுறவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும், அவரது நேர்மையான நிர்வாகம் துறையில் மேலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பணியாளர்கள் மத்தியில் நிலவுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
வெளிப்படையான முறையில் தரமான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டால் கூட்டுறவுத் துறை பெரிய வளர்ச்சியை எட்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை முன்னெடுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர் காந்திராஜ் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அமுதா ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Transparency sale groceries Fair price shop workers grateful decisive decision Chief Minister Vijay