நொடிப் பொழுதில் கவிழ்ந்த அரசு பேருந்து...! கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து மோதி 5 பேர் உடல் நசுங்கி பலி... குழந்தைகள் உட்பட 42 பேர் படுகாயம்...!
government bus overturned instant private bus that lost control crashed crushing 5 people death 42 people including children seriously injured
சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்தும், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், குழந்தைகள் உள்பட 42 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு சென்னையில் இருந்து ஏராளமான பயணிகளுடன் மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை, கொட்டாம்பட்டி அருகே உள்ள வண்டிநகரம் நான்கு வழிச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்திசையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி பயணித்த அரசுப் பேருந்தின் மீது ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியது. மோதலின் வேகம் அதிகமாக இருந்ததால், ஆம்னி பேருந்து சாலையோரமாக சறுக்கிச் சென்று பயணிகள் நிழற்குடையிலும் மோதி நொறுங்கியது. இதன் தாக்கத்தில் ஆம்னி பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்ததுடன், அரசுப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கொட்டாம்பட்டி காவல்துறையினரும் மீட்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு பேருந்துகளிலும் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.இந்த கோர விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் உள்பட 42 பேர் பலத்த காயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும் உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன, ஓட்டுநரின் கட்டுப்பாடு எவ்வாறு இழக்கப்பட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்து மதுரை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
government bus overturned instant private bus that lost control crashed crushing 5 people death 42 people including children seriously injured