தஞ்சை பெரிய கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..!
Traffic changes on Thanjavur Periya Kovil Road
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சாலை இன்று முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் - சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவிலைக் காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வாகனங்களை சாலைகளிலே நிறுத்தி செல்வதால் தஞ்சாவூர் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோவில் சாலை ஒரு வழிப் பாதையாக போக்குவரத்து காவலர்கள் மாற்றம் செய்துள்ளனர். இந்த ஒருவழிப் பாதை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, கும்பகோணம், அரியலூர், திருக்காட்டுப்பள்ளி, பழைய பேருந்து நிலையம் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் காந்திஜி சாலையைப் பயன்படுத்த வேண்டும், திருச்சி, புதுக்கோட்டை, புதிய பேருந்து நிலையம் வழியாக வரும் வாகனங்கள் பெரிய கோவில் சாலை வழியாகச் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வாகன நிறுத்துமிடம் பெரிய கோயில் எதிரே உள்ள வாகன நிறுத்தத்தில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களைப் பெரிய கோயில் சாலையில் நிறுத்தக் கூடாது என்றும், மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Traffic changes on Thanjavur Periya Kovil Road