அரசுப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து முதல்வர் படத்தை மாட்டிய தவெகவினர்; அமைச்சரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிடும் செயல்..?
The thugs who entered a middle school in Vengaivasal panchayat and hung a picture of the Chief Minister
சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சி, சந்தோஷபுரம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தவெகவினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் உள்ளே நுழைந்து முதலமைச்சர் விஜய்யின் படத்தை மாட்டி செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது, தவெக ஒன்றிய கழக செயலாளர் வேங்கைவாசல் டி.ராஜன், ஒன்றிய கழக இணை செயலாளர் எஸ்.மணி, ஒன்றிய கழக துணை செயலாளர் ஏ.விஜய், ஒன்றிய பொருளாளர் மோ.மணி உள்ளிட்ட ஏராளமானோர் வகுப்பறைக்குள் புகுந்துள்ளனர்.
அப்போது கையில் முதல்வரின் படத்துடன் நுழைந்த அவர்கள், மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்துள்ளதோடு, ''இவர் தான் நம்ம CM விஜய் மாமா'' என்று சொல்லி தலைமை ஆசிரியர் முன்னிலையில் புகைப்படத்தை பள்ளியில் மாட்டி அதை நான்கு பேர் செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தை அவர்களே தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் அரசு பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் தவெகவினர் சென்று ஆய்வு செய்வது, மாணவர்களை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு தவெகவினர் அரசு பள்ளியில் மீண்டும் நுழைந்து ரீல்ஸ் எடுத்து போட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
English Summary
The thugs who entered a middle school in Vengaivasal panchayat and hung a picture of the Chief Minister