நடு இரவில், காட்டு பகுதியில் இளம்பெண்ணை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: போக்குவரத்துத் துறை அதிரடி!
TNSTC Suspends Driver and Conductor for Skipping Arumuganeri Route on Madurai Tiruchendur Bus
மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட விதியை மீறி ஆறுமுகநேரி பகுதிக்குச் செல்லாமல் பைபாஸ் சாலை வழியாகச் சென்ற சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், சேவை விதிமீறலில் ஈடுபட்டதற்காகவும் சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரையும் தற்காலிகப் பணியிடைநீக்கம் (Suspension) செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மண்டலம், புதுக்குளம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து (பதிவு எண்: TN 58 N 2368) மதுரையில் இருந்து திருச்செந்தூருக்குப் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. வழக்கமான வழித்தடத்தின்படி ஆறுமுகநேரி நகரப் பகுதிக்குள் சென்று அங்குள்ள பயணிகளை இறக்கி, புதிய பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய அப்பேருந்து, விதிகளைப் புறக்கணித்து பைபாஸ் (Bypass) சாலை வழியாகச் செல்ல முயன்றுள்ளது. இதனால் ஆறுமுகநேரி பகுதிக்குச் செல்ல வேண்டிய பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பயணிகள் அளித்த தகவலின் பேரில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்தினர். அதில் வழித்தட விதிமீறல் நடந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் தற்காலிகமாகப் பணியிடைநீக்கம் செய்து அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பான, வசதியான மற்றும் தடையற்ற பயணத்தை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள போக்குவரத்துத் துறை, எதிர்காலத்தில் இதுபோன்ற வழித்தட மீறல்களோ அல்லது பயணிகளுக்குச் சிரமம் அளிக்கும் தவறுகளோ மீண்டும் நடைபெறாத வகையில் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
English Summary
TNSTC Suspends Driver and Conductor for Skipping Arumuganeri Route on Madurai Tiruchendur Bus