திருப்பூரில் பரபரப்பு | திடீரென மூடப்பட்ட பால்பண்ணை: கொந்தளிக்கும் விவசாயிகள்!
Tirupur Sudden close dairy Farmers blockade
திருப்பூர், பல்லடம் அருகே தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை திருச்சி, துறையூரை சேர்ந்த செல்வகுமார், சுந்தரமூர்த்தி மற்றும் பல்லடம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோர் நடத்தி வந்ததாக தெரிகிறது.
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பால் வழங்கி வந்தனர். மேலும் இந்த நிறுவனம் பால் கொள்முதல்கான பணத்தை மாத கணக்கில் வழங்காமல் இருந்து வந்த நிலையில் நிறுவனத்தின் முதலாளிகள் திடீரென தலைமறைவாகியதால் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடி பால் கொள்முதல் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர், மாநில பொதுச் செயலாளர், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர், மேற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு பால் கொள்முதல் பணம் கொடுக்காமல் பால் பண்ணை மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tirupur Sudden close dairy Farmers blockade