தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு...! - இறுதியாக வென்றது நீதி
Thoothukudi student murder case Shocking verdict Dharma Muneeswaran found guilty Justice finally prevails
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி, கடந்த மார்ச் 10-ஆம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேற்கொண்ட தேடுதல் பணியின் போது, மறுநாள் காலை அந்த மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிய காவலர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.
இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை காவலர்கள் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் அனைத்து தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்தது.
அதன் பின்னர், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், குற்றவாளிக்கு விதிக்கப்பட உள்ள தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Thoothukudi student murder case Shocking verdict Dharma Muneeswaran found guilty Justice finally prevails