'கொண்டாட்டம் போதும்... மக்கள் பிரச்சினையை கவனிங்க'...! - அண்ணாமலை வலியுறுத்தல்
Enough celebration Pay attention people problems Annamalai urges
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 15 நாட்களுக்குள் தமிழகத்தில் 25 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் 4 இரட்டை கொலைகளும் இடம்பெற்றிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.

இதுமட்டுமின்றி, 19 பாலியல் குற்றச்சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பொதுமக்களிடையே கடும் விவாதங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக காவல்துறை கடந்த கால சம்பவங்களில் இருந்து எந்தவித பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் கொலைகாரர்கள், போதைப்பொருள் கும்பல்கள், பாலியல் கடத்தல்காரர்கள் மற்றும் வன்கொடுமை செய்பவர்கள் எந்த அச்சமுமின்றி சுதந்திரமாக நடமாடும் நிலை உருவாகியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் நிகழ்ந்த பல்வேறு குற்றச்சம்பவங்களிலிருந்தும் மாநில காவல்துறை எந்த விழிப்புணர்வையும் பெற்றதாக தெரியவில்லை என்றும், புதிய தவெக அரசு வெற்றிக் கொண்டாட்ட மனநிலையிலிருந்து வெளியே வந்து, தரையில் அரங்கேறி வரும் இந்த மோசமான சட்டம் ஒழுங்கு சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே முன்விரோதம் காரணமாக இன்று அதிகாலை 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Enough celebration Pay attention people problems Annamalai urges