தூத்துக்குடி | சின்ன பிரச்சனை... நண்பன் என்றும் பாராமல் திட்டமிட்டு பழிவாங்கிய நண்பன்!
Thoothukudi employee killed friend due to enmity
தூத்துக்குடி, புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் அழகர் (வயது 38) இவர் ஆடைகள் விற்பனை தொழில் செய்து வந்தார்.
இவருக்கு திருமணமான நிலையில் மனைவி மற்றும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்
(வயது 43) இவர் புதியம்புத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நண்பர்களான இவர்கள் சமீபத்தில் திருமணத்திற்கு சென்ற போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் புதியம்புத்தூர் பிரதான சாலையில் கடந்த 24ஆம் தேதி அழகர் அவரது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த போது அங்கு முருகேசன் வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த முருகேசன் அருகில் இருந்த கட்டையால் அழகரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அழகர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அழகரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் முருகேசன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் முருகேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Thoothukudi employee killed friend due to enmity