தஞ்சாவூருக்கு முதலமைச்சர் அடுத்த மாதம் வருகை தரும்போது சிகிச்சை பிரிவை திறக்கவுள்ளார்...! - மா. சுப்பிரமணியன்
Chief Minister open treatment unit when he visits Thanjavur next month M Subramanian
தமிழ்நாடு அரசு தஞ்சாவூரில் இன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.11.82 கோடி மதிப்பில் 16 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ.7.45 கோடி மதிப்பில் 13 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் 'கோவி செழியன்' ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினர்.

மா. சுப்பிரமணியன்:
மேலும், இந்த விழாவில் அமைச்சர் ''மா. சுப்பிரமணியன்'' தெரிவித்ததாவது,"புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதால் வருமுன் காக்கும் விதமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் ரூ. 5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ.17000 முதல் ரூ.18000 செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் ரூ.1,000 முதல் ரூ.4000 வரை செய்து கொள்ளலாம்.தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள் மீது மக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.உயர் வருவாய் பிரிவினரும் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்பட 13 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதுபோல மேலும் 9 மாவட்டங்களில் கட்டண சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை கட்டணம் ரூ. 8000 முதல் ரூ. 9000 வசூலிக்கப்படும் நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் மொத்தம் 28 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 9.50 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் ஏறக்குறைய 50,000 குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. இக்குழந்தைகளைக் கண்காணித்து, பராமரிப்பதற்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.தஞ்சாவூர் மருத் வக்கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 65.80 கோடி மதிப்பில் 80 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ 23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவை தமிழக முதல்வர் தஞ்சாவூருக்கு அடுத்த மாதம் வருகை தரும்போது திறக்கவுள்ளார். அரசு ராசாமிராசுதாரர் மருத்துவமனை மேலும் மேம்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Chief Minister open treatment unit when he visits Thanjavur next month M Subramanian