திருநெல்வேலி || அரசு பள்ளியில் கோஷ்டி மோதல் - 15 மாணவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு.!!
gang fight in tirunelveli government school
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர்குளம் அருகே உள்ள வன்னிகோனேந்தலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நேற்று 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தபோது அதே பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவனிடம் இருந்து மிட்டாயை பிடுங்கிக் கொண்டதோடு, அவரை அவதூறாக பேசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில் பள்ளி வளாகத்தில் இரு தரப்பினராக மாணவர்கள் பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.
இதைப்பார்த்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் முடியாததால் சம்பவம் குறித்து உடனடியாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து சுமார் 15 மாணவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு, காலாண்டு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமான முறையில் தலைமுடியை வெட்டி விட்டு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டு அவர்களை விடுவித்தனர்.
English Summary
gang fight in tirunelveli government school