முன்னுக்குப் பின் முரணான பதில்... கிடுக்கிப்பிடி விசாரணை...! 25 கிலோ கஞ்சாவுடன் திருச்சியைச் சேர்ந்த 2 பேர் கூண்டோடு கைது...!
Contradictory answers stinging investigation 2 people from Trichy arrested cage 25 kg ganja
தஞ்சையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிலையப் பகுதியில், விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, அதனை கொண்டு வந்த 2 பேரை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் காவலர்கள் ஆம்னி பேருந்து நிலையப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த 2 பேரின் செயல்பாடுகள் காவலர்களின் கவனத்தை ஈர்த்தன.

உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கினர். இதனால் சந்தேகம் வலுத்த நிலையில், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 25 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் திருச்சி அருகே உள்ள புங்கனூர் பகுதியைச் சேர்ந்த கிரி (49), தர்மேந்திரன் (48) என்பது தெரியவந்தது.
மேலும், திருச்சியில் இருந்து தஞ்சை பகுதிக்கு விற்பனை நோக்கில் கஞ்சாவை கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.இதையடுத்து மருத்துவக்கல்லூரி காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Contradictory answers stinging investigation 2 people from Trichy arrested cage 25 kg ganja