விமானத்தின் மீது விழுந்த இடி; அச்சத்தில் அலறிய பயணிகள்; சீனா விமான நிலையத்தில் திகில் சம்பவம்..!
Passengers scream in fear as thunder strikes plane in China
சீனாவின் கிழக்குப் பகுதிகளை 'டால்பின்' புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த ஆண்டில் சீனாவை தாக்கிய சக்திவாய்ந்த புயலாகக் இது கருதப்படுகிறது.
இந்த சூழலில் சீனா சவுத்தர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் CZ3209 என்ற விமானம், சீனாவின் ஷென்சென் பாவோன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வூக்ஸி பகுதிக்கு மலை நேரத்தில் பயணிக்க தயாராக இருந்தது.
விமானம் புறப்படுவதற்கு முன்பு, விமான நிலைய பகுதியில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும், விமானத்தை ஓடுபாதைக்கு கொண்டு வந்த விமானி, பறப்பதற்கு ஆயத்தமானார்.
அப்போது மிகப்பெரிய சத்தத்துடன் பேரிடி ஒன்று விமானத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறியுள்ளனர். இதையடுத்து, பயணத்தை பாதியிலேயே நிறுத்திய தலைமை விமானி, ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்று, தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து, விமானத்தை ஆய்வு செய்துள்ளார்.

ஆய்வில் குறித்த விமானத்தின் அடிப்பகுதியிலும், வால் பகுதியிலும் மின்னல் தாக்கியதற்கான 20-க்கும் மேற்பட்ட அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானம் உடனடியாக மாற்றப்பட்டு, வேறொரு விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த விமான பயணம் சுமார் 04 மணி நேரம் தாமதமாகியுள்ளது.
விமானத்தின் மீது இடி தாக்கியது குறித்து தங்களது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட பயணிகள், விமானம் நகர்ந்து கொண்டிருந்தபோது பலத்த காற்று மற்றும் மழையால் குலுங்கியதுடன், விமானத்திற்கு மிக அருகில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதை உணர்ந்ததாக தங்களில் திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், பெரிய மின்னல் தாக்கியபோதும், விமானத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று எழுந்த கேள்விக்கு, தொழில்நுட்ப குழுவினர் பதிலளித்துள்ளதாவது;
விமானத்தின் வெளிப்புறம் அலுமினியக் கலவையால் உருவாகியிருப்பதால், மின்னல் தாக்கியபோது பாய்ந்த மின்சாரமானது விமானத்தில் வெளிப்புற பகுதி வழியாகவே வெளியேறியது என்றும், அதனால் கேபினுக்குள் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், விமானத்தில் உள்ள முக்கிய மின்னணுச் சாதனங்கள் அனைத்தும் மின்னல் பாதுகாப்பு வடிவமைப்புகளைக் கொண்டுள்ளதால் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்று, தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்தனர்.
English Summary
Passengers scream in fear as thunder strikes plane in China