அவரை யாரும் கைவிடவில்லை! கடனை அடைக்க முடியாத வருத்தம்..ரொம்ப ஃபீல் செஞ்சார் -பாரதிராஜா பற்றி உறவினர் ஓபன் டாக்!
He was deeply distressed about being unable to repay his debts a relative speaks openly about Bharathiraja
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்குப் பிறகு, இறுதிக் கால வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின.
பாரதிராஜா குடும்பத்தினரிடமிருந்து விலகி தனிமையில் வாழ்ந்தார், பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டார், குடும்பத்தினருக்குள் சொத்து தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருந்தன போன்ற செய்திகள் பரவிய நிலையில், அவரது உறவினரும் இயக்குநருமான மனோஜ்குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:“பாரதிராஜா அவர்களை எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள் என்று சிலர் பேசுவது உண்மையல்ல. இறுதிக் காலத்திலும் அவரைச் சுற்றி குடும்பத்தினரும், நண்பர்களும் இருந்தனர். ஒரு வாரத்திற்கு முன்புகூட கங்கை அமரன் அவரைச் சந்தித்தார். நடிகை ராதிகாவும் வந்து பார்த்துச் சென்றார். அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் உற்சாகப்படுத்தி இருந்தனர்.”
மேலும் அவர் கூறுகையில்:“கங்கை அமரன் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துகளை தெரிவித்தார். பின்னர் அவரிடமும் சூழ்நிலையை விளக்கினோம். பாரதிராஜாவுக்கு ஒரு மனக்குறை இருந்தது. தன்னுடைய சில கடன்களை அடைப்பதில் போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லையோ என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்க்கை முழுவதும் ராஜாவைப் போல வாழ்ந்தவர். அந்த மனநிலையே அவரை வருத்தப்படுத்தியது.”
பாரதிராஜாவின் மகன் மனோஜின் மறைவு அவரை மிகவும் பாதித்ததாகவும், அந்த துயரத்திலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், பாரதிராஜாவின் இறுதிக் கால வாழ்க்கை குறித்து பரவி வரும் பல தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என்றும், குடும்பத்தினரும் நெருங்கியவர்களும் அவருடன் இருந்தனர் என்றும் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் படைப்புகளும், அவருடைய சினிமா பாரம்பரியமும் காலத்தைக் கடந்து என்றும் நினைவுகூரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
He was deeply distressed about being unable to repay his debts a relative speaks openly about Bharathiraja