"விஜய் மீது விஜயகாந்த்துக்கு தனி பாசம் இருந்தது"!விஜய்க்காக விஜயகாந்த் செய்தது.. மறக்காமல் நினைவுகூர்ந்த விஜய் அம்மா ஷோபா!
Vijayakanth held a special affection for Vijay Vijay mother Shoba fondly recalls what Vijayakanth did for Vijay
தேமுதிக நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த், கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, திரைத்துறையில் ஆரம்ப காலத்தில் விஜய்க்கு துணையாக நின்ற விஜயகாந்த், இன்று அவர் தமிழக முதலமைச்சராக உயர்ந்திருப்பதைக் கண்டிருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தாய் ஷோபா, சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு இணையாக கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகராகவும் அவர் விளங்கினார். திரைத்துறையில் பல புதிய நடிகர்களுக்கு ஆதரவாகவும் துணையாகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசியலிலும் தனது செல்வாக்கை நிரூபித்த விஜயகாந்த், ஆரம்பத்தில் கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கியிருந்தாலும், பின்னர் அரசியல் பயணத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். உடல்நலப் பிரச்சினைகளால் அரசியலில் இருந்து படிப்படியாக விலகிய அவர், 2023ஆம் ஆண்டு காலமானார்.
இந்த நிலையில், விஜய்யின் ஆரம்பகால சினிமா பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் விஜயகாந்த். குறிப்பாக, விஜய் மேலும் வளர வேண்டும் என்ற நோக்கத்தில், தனது நட்சத்திர அந்தஸ்தை பொருட்படுத்தாமல் 'செந்தூரபாண்டி' திரைப்படத்தில் நடித்ததாக திரையுலகினர் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஷோபா, "செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த்தை நடிக்க வைக்க முடிவு செய்த பிறகு, அவரை சந்திக்க எஸ்.ஏ. சந்திரசேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறினார். ஆனால், சிறிது நேரத்திலேயே விஜயகாந்த்தே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். 'என்னைப் பார்க்க எஸ்.ஏ.சி சார் ஏன் வர வேண்டும்? நானே வந்துவிட்டேன்' என்று அவர் கூறினார்.
எஸ்.ஏ. சந்திரசேகரும் விஜயகாந்தும் சேர்ந்து 17 படங்களில் பணியாற்றியுள்ளனர். அவற்றில் பல படங்கள் வெற்றி பெற்றவை. விஜய் மீது விஜயகாந்த்துக்கு எப்போதும் தனி பாசம் இருந்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஷோபாவின் இந்தப் பேட்டி, விஜயகாந்த் மற்றும் விஜய் குடும்பத்தினருக்கிடையேயான நெருக்கமான உறவை மீண்டும் நினைவூட்டியதுடன், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
English Summary
Vijayakanth held a special affection for Vijay Vijay mother Shoba fondly recalls what Vijayakanth did for Vijay