நெல்லையில் பள்ளியில் பரபரப்பு – 9-ம் வகுப்பு மாணவனின் புத்தகப்பையில் மறைக்கப்பட்ட கத்தி!காரணத்தை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி
There was a stir at a school in Nellai a knife was hidden in a 9th grade student school bag Teachers were shocked when they heard the reason
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவனின் புத்தகப்பையில் கத்தி கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திசையன்விளை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் நேற்று காலை வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றன. அப்போது, 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது புத்தகப்பையில் பாடப்புத்தகங்களுக்கு இடையே கத்தியை மறைத்து வைத்திருந்தது ஆசிரியரின் கவனத்துக்கு வந்தது.
உடனே ஆசிரியர், இந்த தகவலை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர் திசையன்விளை போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவனிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவர் முன்பு கத்தியை காட்டி மிரட்டியதால், தன்னைக் காக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக கத்தியை புத்தகப்பையில் மறைத்து கொண்டு வந்ததாக அந்த மாணவன் கூறியதாக தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆசிரியர்களும், சக மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீசார் மாணவரை எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
பள்ளி வளாகத்திற்கே மாணவன் கத்தியை கொண்டு வந்தது திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
There was a stir at a school in Nellai a knife was hidden in a 9th grade student school bag Teachers were shocked when they heard the reason