கும்பகோணத்தில் 500 கிலோ எடையில் ஐம்பொன்னாலான 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றித்தூண் வார்ப்பு..!
The Operation Sindoor Victory Pillar weighing 500 kg was cast in Kumbakonam
கடந்த 2025, ஏப்ரல் 22-ஆம் தேதி, காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நாட்டை உலுக்கியது.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்தாண்டு மே மாதம் 07-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கி, பாகிஸ்தானின் தீவிரவாதிகளின் முகாம் மற்றும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதலை நடத்தி, அங்கிருந்த சிலவற்றை அழித்தது.
இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் கும்பகோணம் வட்டம் புளியஞ்சேரியில், 500 கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றித்தூண் வார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றுள்ளார். ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் அசோசியேஷன் நிறுவன தலைவர் மில்டிரி பாபு ஏற்புரையாற்றினார்.

கட்டிடக்கலை வல்லுநர் நீலகண்ட லோகநாதன், கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்ததோடு, முன்னாள் படைவீரர்கள் நலச் சங்கத்தின் கும்பகோணம் பகுதி தலைவர் சுபேதார் மேஜர் மாசிலாமணி வாழ்த்துரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்தூர்' நினைவு தூண் வடிவமைக்கும் சிற்பி குமாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. முடிவில் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் வெல்ஃபர் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் நன்றியுரை ஆற்றினார்.
English Summary
The Operation Sindoor Victory Pillar weighing 500 kg was cast in Kumbakonam