ஆசிரியர்களை கைவிட மாட்டோம் - திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி! 
                                    
                                    
                                   teachers issue TET Exam DMk Minister 
 
                                 
                               
                                
                                      
                                            ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்ற அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில் கூறப்பட்டதாவது, கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்ததற்கு முன் பணியில் சேர்ந்தும், 5 ஆண்டுகள் மேலாக பணியாற்றிய ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வை எழுதிப் பாஸ் செய்ய வேண்டும்.
தேர்வில் தோல்வியடைந்தால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அப்போதும் அவர்கள் ஓய்வுபெற்றதாகக் கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வூதிய நன்மைகள் வழங்கப்பட வேண்டும். உடல் நலக் குறைபாடுகள் அல்லது பிற சிறப்புச் சூழ்நிலைகளால் தேர்வை எழுத முடியாதவர்களின் கோரிக்கைகளை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், புதியதாக ஆசிரியராக சேர விரும்புவோரும், ஏற்கனவே பணியிலிருப்பவர்கள் பதவி உயர்வு பெற விரும்பினாலும், இந்த தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் எனவும், இல்லையெனில் அந்த உரிமை கிடையாது எனவும் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், “உச்சநீதிமன்றம் டெட் தேர்வு கட்டாயம் என தெரிவித்திருந்தாலும், ஆசிரியர்களை ஒருபோதும் தமிழக அரசு கைவிடாது. தீர்ப்பின் முழு விவரம் கிடைத்ததும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அதேசமயம், ஆசிரியர் சங்கங்களுக்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் உள்ளது” என தெரிவித்தார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       teachers issue TET Exam DMk Minister