ஒரு நபர் கூட என்னை திரும்பிப் பார்க்கவில்லை! என் ஈகோ சுக்குறூறாய் உடைந்த தருணம் அது!ரஜினிகாந்த் பகிர்ந்த ஆன்மீக அனுபவம்!
Not a single person looked back at me That was the moment my ego was shattered Rajinikanth shared a spiritual experience
பெங்களூருவில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் 45வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, தனது வாழ்க்கையை மாற்றிய ஒரு சுவாரஸ்யமான ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்த், எங்கு சென்றாலும் ரசிகர்களின் அன்பில் மூழ்குவது வழக்கமான ஒன்று. ஆனால், ஒரு இடத்தில் யாரும் தன்னை கவனிக்காத சம்பவம் தனது மனநிலையை முழுவதும் மாற்றியதாக அவர் தெரிவித்தார்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், பல ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச ஆசிரமத்துக்கு சென்ற அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.
“ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த அமைதி, இயற்கை, மக்களின் முகத்தில் தெரிந்த அமைதியான உணர்வு என அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே தங்க நினைத்த நான், அந்த ஆன்மீக சூழ்நிலையால் 15 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டேன்” என்று கூறினார்.
அப்போது குருஜியுடன் வெளியே சென்ற ஒரு சம்பவத்தை அவர் சிரிப்புடன் பகிர்ந்தார்.“நான் வெளியே சென்றால் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம், ஆட்டோகிராப் கேட்பார்கள் என்று நினைத்து கொஞ்சம் தயங்கினேன். ஆனால் குருஜி, ‘எந்த பிரச்சனையும் இருக்காது’ என்று கூறி என்னை அழைத்துச் சென்றார்,” என்றார்.
“அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தனர். தமிழ்நாட்டிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். என்னை பார்த்ததும் அனைவரும் ஓடி வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு நபர் கூட என்னை திரும்பிப் பார்க்கவில்லை,” என்று ரஜினி கூறியதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
“யாரும் புகைப்படம் கேட்கவில்லை. ஆட்டோகிராப் கேட்கவில்லை. நான் கை அசைத்தும் கூட யாரும் கவனிக்கவில்லை. அந்த தருணமே என் ஈகோவை முழுமையாக உடைத்தது,” என்று அவர் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், “உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது என்று நான் முன்பே சொன்னேனே,” என்று நகைச்சுவையாக கூறினார். அதற்கு ரஜினிகாந்த் தனது தலையை சுட்டிக்காட்டி, “இங்கே தான் பெரிய தாக்கம் ஏற்பட்டது,” என்று சிரித்தபடி பதிலளித்தார்.
இறுதியாக, “புகழ், நட்சத்திர அந்தஸ்து எல்லாம் ஆன்மீகத்தின் முன் மிகச் சிறியது. ஆன்மீகத்தின் சக்திக்கு இணையானது வேறொன்றுமில்லை,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
English Summary
Not a single person looked back at me That was the moment my ego was shattered Rajinikanth shared a spiritual experience