சவுதியில் சித்ரவதைக்கு ஆளான தமிழர்: கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்பு!
Tamils affected by atrocities in Saudi Rescue after a fierce struggle
சவுதி அரேபியா பாலைவனத்தில் ஒட்டகம், ஆடு மேய்த்து சித்ரவதைக்கு ஆளான தமிழர் கடும் போராட்டத்துக்கு பின்பு சவுதியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் பெரியதும்பூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான கவாஸ்கர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் சவுதிஅரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார்.இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
கவாஸ்கர் சவுதிஅரேபியா சென்றதும் அங்கு அவரை பாலைவனத்தில் ஒட்டகம் மற்றும் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. அவர் அந்த பணியை செய்ய மறுத்ததால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை கவாஸ்கர், செல்போன் மூலம் தனது மனைவியிடம் கூறி அழுதுள்ளார்.
உடனடியாக அவரது மனைவி உதயஜோதி நாகப்பட்டினத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள், அரபுநாட்டில் உள்ள செந்தமிழர் பாசறை அமைப்பு மூலம் அவரை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். சட்டரீதியாக எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில், சம்பந்தப்பட்ட ஒட்டகப்பண்ணை உரிமையாளரிடம் விசா கட்டணம் ரூ.1½ லட்சம் கொடுத்து கவாஸ்கரை மீட்டனர். இதையடுத்து கவாஸ்கர் சவுதியில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார்.
சவுதிஅரேபியாவில் இருந்து மீட்கப்பட்ட கவாஸ்கர் கூறும்போது, "சவுதியில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் புறப்பட்டு சுமார் 3½ மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அங்குதான் ஒட்டகம், ஆடுகளை மேய்க்க வேண்டும். வேலையை செய்ய மறுத்தால் அங்கிருந்த 2 பெண்கள் என்னை அடித்து துன்புறுத்துவார்கள். ஒருகட்டத்தில் எனது சிம் கார்டையும் பறித்துக்கொண்டனர்.தற்போது என்னை பல போராட்டங்களுக்கு பிறகு அங்கிருந்து மீட்டு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கண்ணீருடன் கூறினார்.
English Summary
Tamils affected by atrocities in Saudi Rescue after a fierce struggle