தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்கள் மழை தொடரும்!
Tamilnadu Weather Report Rain Alert 25 10 2025
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்கள் வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தென்கிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவடைந்துள்ளது. இது தற்போது போர்ட் பிளேயரில் இருந்து மேற்கு-தென்மேற்கே 440 கி.மீ., சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 970 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 26 ஆம் தேதி மேலும் வலுப்பெற்று, 27 ஆம் தேதி புயலாக மாறும். பின்னர் 28 ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடா அருகே, மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ., இடையிடையே 110 கி.மீ. வரை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் இன்று சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மலைப்பகுதி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.
26 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் பகுதிகளில் கனமழை பெய்யலாம். 27 ஆம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் மிக கனமழையும், 28 ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் கனமழையும் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 31°செ. மற்றும் குறைந்தபட்சம் 25°செ. ஆக இருக்கும்.
மீனவர்கள் 25 முதல் 29 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu Weather Report Rain Alert 25 10 2025