2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்துக்கள்...! ராமநாதபுரத்தில் கிடைத்த வரலாற்று 'தமிழி' கல்வெட்டு...! - வியப்பில் தொல்லியல் துறை
Tamil writings dating back 2000 years Historical Tamil inscription found Ramanathapuram Archaeological Department astonishment
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள ஆப்பனூர் கிராமத்தில், தமிழர் வரலாற்றை பெருமைப்படுத்தும் அரிய தொல்லியல் சான்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்டியேந்தல் பகுதியில் அமைந்துள்ள அரியநாச்சி அம்மன் திருக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கு திருப்பணியின்போது, மண்ணுக்குள் புதைந்து கிடந்த பழமையான நடுகல் ஒன்று மீட்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சின்னத்தை ஆசிரியர் முனியசாமி அடையாளம் கண்டுள்ளார்.இதையடுத்து, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும் தொல்லியல் ஆய்வாளருமான சாந்தலிங்கம் மற்றும் உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களை ஆய்வு செய்ததில், “ஆபன்னூர் ஏறி மாண்டு விழுந்த அத்தியன் கீரன் கல்” என்ற அரிய வரலாற்றுச் செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாண்டிய மண்டலத்தின் இதயப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த நடுகல் கல்வெட்டு, பொது யுகத்திற்கு முன்பட்ட முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மேம்பட்ட எழுத்து மரபையும் வீரர்களை நினைவுகூரும் பண்பாட்டையும் கடைப்பிடித்திருந்ததை இந்த கல்வெட்டு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மண்ணுக்கடியில் மறைந்திருந்த இந்த வரலாற்றுப் பொக்கிஷம், தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும் செழுமையான பண்பாட்டு அடையாளத்தையும் உலக அரங்கில் மீண்டும் வலியுறுத்தும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
English Summary
Tamil writings dating back 2000 years Historical Tamil inscription found Ramanathapuram Archaeological Department astonishment