தேர்தல் ஆட்டத்தையே புரட்டி போட்ட ஸ்டாலின்..3 நாளில் 3 முத்தான அறிவிப்பு! யோசிக்க முடியாத மூவ்!
Stalin turned the election game upside down 3 big announcements in 3 days Unthinkable move
தமிழ்நாடு அரசு கடந்த 30 நாட்களில் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள அறிவிப்புகள், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் முடிவையே மாற்றும் வகையில் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக பெண்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப வாக்காளர்கள் ஆகிய முக்கிய வாக்கு வங்கிகளை குறிவைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முக்கிய உத்தரவுகளை அறிவித்து வருகிறார். இவை தேர்தல் நேரத்தில் பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில், பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, ₹3,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு, வேட்டி மற்றும் சேலை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இந்தப் பரிசுகள் அனைத்தும் பொங்கலுக்கு முன்பாக நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறவுள்ளனர். ரேஷன் கார்டு அடிப்படையில் டோக்கன் வழங்கப்படும், அந்த டோக்கனை காட்டி மக்கள் பணமும் பொருட்களும் பெற்றுக்கொள்ளலாம். டோக்கன் அச்சடிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்ட பொருட்களும் தொகுப்பில் இடம்பெறுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, அரசு ஊழியர்களை நேரடியாக கவரும் வகையில், புதிய உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை ஊதியத்தின் 50% ஓய்வூதியமாக உறுதி செய்யப்படுகிறது. மூவர் குழு (ககன்தீப் சிங் பேடி தலைமையில்) அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியானது.
TAPS திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10% ஓய்வூதிய நிதிக்கு செலுத்த வேண்டும். கூடுதல் நிதிச் சுமையை மாநில அரசே ஏற்கும். இதன் காரணமாக, அரசுக்கு உடனடியாக ₹13,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும். ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு, மரணமடைந்தால் 60% குடும்ப ஓய்வூதியம், அதிகபட்சமாக ₹25 லட்சம் பணிக்கொடை போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. CPS திட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வாக்குகளை உறுதியாக கவரும் திட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் இரண்டு கோடி பெண்கள் வரை இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக பயன் பெற்று வருகிறார்கள். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தீவிரமாக சரிபார்க்கப்பட்டு, புதிதாக தகுதி பெற்ற பெண்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் பணம் அனுப்பப்பட்டு வருகிறது.
மாணவர்களை மையமாக வைத்து, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டமும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் லேப்டாப்கள் Intel Core i3 அல்லது AMD Ryzen processors, 8GB RAM, 14 அல்லது 15.6 இன்ச் திரை, USB-C போர்ட், quad-core processor போன்ற மேம்பட்ட வசதிகளுடன் வருகிறது. மேலும், Microsoft Office 365 சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு AI தொடர்பான பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், “நான் முதல்வன்” போன்ற திட்டங்களில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட லேப்டாப் அவசியம் என்ற காரணத்தால் இந்தத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இந்த மடிக்கணினி விநியோகம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் இந்தத் திட்டம் நின்றுவிட்டது என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், பெண்கள் – அரசு ஊழியர்கள் – மாணவர்கள் – குடும்ப வாக்காளர்கள் என தேர்தலில் தீர்மானிக்கும் முக்கிய பிரிவுகளை குறிவைத்து, கடந்த 30 நாட்களில் வெளியான இந்த அறிவிப்புகள், 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
English Summary
Stalin turned the election game upside down 3 big announcements in 3 days Unthinkable move