'பிளக்ஸ் போர்டுகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீற செயல்பட கூடாது'; பிளக்ஸ் நிறுவன உரிமையாளர்களுக்கு சிவகங்கை எஸ்.பி. அபிஷேக் குப்தா அறிவுரை..!
Sivaganga SP Abhishek Gupta advises the owners of the flats not to violate the High Court orders
சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில், எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையில் பிளக்ஸ் போர்டு நிறுவன உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளும், மாவட்டத்தில் உள்ள பிளக்ஸ் போர்டு நிறுவன உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், திருவிழா மற்றும் குருபூஜை காலங்களில் பிளக்ஸ் போர்டுகள் தொடர்பாக காவல் துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின்படி செயல்பட வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்பட முடியாது என்றும் எஸ்.பி. அபிஷேக் குப்தா, பிளக்ஸ் போர்டு நிறுவன உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதாவது, பிளக்ஸ் போர்டுகளில் வன்முறையைத் தூண்டும் வகையிலான வாசகங்கள் அல்லது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக, ரத்தம் வடிவது போன்ற வன்முறையை வெளிப்படுத்தும் காட்சிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அல்லது இடையூறு ஏற்படுத்தக்கூடிய வகையிலான காட்சிகளை பிளக்ஸ் போர்டுகளில் இடம்பெறச் செய்யக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரும் இமானுவேல் குருபூஜை, தேவர் குருபூஜை உள்ளிட்ட குருபூஜை காலங்களில் சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்றும் பிளக்ஸ் நிறுவன உரிமையாளர்களுக்கு எஸ்.பி. அபிஷேக் குப்தா அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், பிளக்ஸ் போர்டு தயாரிக்கப்படும் போது, அதில் நிறுவனத்தின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய மொபைல் எண் இடம்பெற வேண்டும் எனவும் எஸ்.பி. அபிஷேக் குப்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Sivaganga SP Abhishek Gupta advises the owners of the flats not to violate the High Court orders