'தமிழ்நாட்டில் விதிகளை மீறி இயங்கும் சாய, சலவை தொழிற்சாலைகள் மூடப்படும்'; அரசு எச்சரிக்கை...!
Government warns that dye and laundry factories operating in violation of rules in Tamil Nadu will be closed
''சாய, சலவை மற்றும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகள் அனைத்தும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் வகையில் உரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி வாரியத்தின் முறையான இசைவாணை பெற்ற பின்னரே இயக்க வேண்டும். அவ்வாறு விதிககளை மீறும் பட்சத்தில் தொழிற்சாலையை மூடும் நடவடிக்கை எடுக்கப்படும்.'' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 ஆகியவற்றின் கீழ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணை பெற்று இயக்கப்படுவது கட்டாயமாகும். மேற்கண்ட சட்டங்களின் விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சாய, சலவை மற்றும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகள், உரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முறையான இசைவாணை பெறாமலும் இயங்கி வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
மேற்கூறிய செயல், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 ஆகியவற்றின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இத்தகைய தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடிநீர் மாசுபடுதல் மற்றும் பொது மக்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே இத்தகைய சாய, சலவை மற்றும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகள் அனைத்தும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் வகையில் உரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி வாரியத்தின் முறையான இசைவாணை பெற்ற பின்னரே இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மீறும் பட்சத்தில் மேற்கூறிய சட்டங்களின் படி, வாரியத்தால் தொழிற்சாலையை மூடுதல், மின் இணைப்பு துண்டித்தல் மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.''எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Government warns that dye and laundry factories operating in violation of rules in Tamil Nadu will be closed