சென்னை அருகே அதிர்ச்சி: தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி தற்கொலை; மற்றொரு மாணவர் குதித்துத் தீவிர சிகிச்சை!
Shocking Tragedies at Chennai Engineering College Student Dies by Suicide Another Critically Injured
சென்னை பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், அடுத்தடுத்த நாட்களில் அரங்கேறிய தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் சக மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆழமான சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இக்கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பூந்தமல்லியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஷெரின், கல்லூரி நேரத்தில் திடீரென கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தந்தை சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில், தாய் கல்லூர பேராசிரியராக உள்ளார். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பெற்றோர் அன்பும் அரவணைப்பும் கிடைக்காத மனவேதனையில் இம்முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டு மாணவி எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
இச்சம்பவத்தின் வடு மாறுவதற்குள், மறுநாளே அதே கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் (ECE) இரண்டாம் ஆண்டு படித்து வந்த சசிதரன் (19) என்ற மாணவர், வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோதே திடீரென 3-வது மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்து கை, கால்கள் முறிந்த நிலையில் மீட்கப்பட்ட அம்மாணவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லூரிக்கு முறையாக வராததால் நிர்வாகம் கண்டித்ததே இத்தற்கொலை முயற்சிக்குக் காரணம் என ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் கண்முன்னே அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரு அதிர்ச்சி சம்பவங்களால் கல்லூரி வளாகமே பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, கல்லூரி நிர்வாகம் உடனடியாக விடுமுறை அறிவித்து, விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவ-மாணவிகளையும் உடனடியாக வெளியேற்றிச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது. பின்னர் வரும் 7-ஆம் தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Shocking Tragedies at Chennai Engineering College Student Dies by Suicide Another Critically Injured