விழுப்புரம் சாலாமேடு பொன்னேரியில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் அதிர்ச்சி: அதிகாரிகள் விசாரணை..!
Shocked by tons of dead fish floating in Salamedu Lake in Villupuram
விழுப்புரம் சாலாமேடு ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் இதுகுறித்து மீன்வளம், சுற்றுச்சூழல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் சாலாமேடு பகுதியில் பொன்னேரியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் முக்கியத்துவமாக விளங்குகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஹோட்டல்களின் கழிவுநீர் மற்றும் மதுபான ஆலை ரசாயன கழிவுகள் கலந்து நீரின் நிறமே மாறிவிட்டது. இதனால் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் அளித்துள்ளனர்.

இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே இந்த ஏரியில் மீன்வளத்துறை சார்பில் மீன்வளர்ப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், சுரேஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன்குஞ்சுகளை வளர்த்து வந்துள்ளார். இன்னும் ஒரு மாதங்களில் இந்த மீன்கள் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 02 நாட்களாக டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குத்தகைதாரர் கவலையடைந்து கூறியுள்ளதாவது: இந்த ஏரியில் ஹோட்டல் கழிவுகளும், மதுபான ஆலை ரசாயன கழிவுகள் கலப்பதை பலமுறை சுட்டிகாட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்து செத்து மிதக்கின்றன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இறந்துபோன மீன்களை பறவை, நாய்கள் சாப்பிட்டு வருகின்றதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது என்றும், மீன்கள் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நேற்று மீன்வளத்துறை உதவி இயக்குநர் நித்ய பிரியதர்ஷனி மற்றும் மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு ஏரியில் ரசாயன கழிவுகள் கலந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
English Summary
Shocked by tons of dead fish floating in Salamedu Lake in Villupuram