அதிவேகத்தில் வந்த லாரி மோதி பள்ளி வேன் விபத்து...! ஆத்திரம் அடைந்த பொதுமக்களால் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல்...!
School van collides speeding lorry Angry public suddenly blocks national highway
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது எதிரே வந்த லாரி மோதியதில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.அந்த வேனில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் மீது மோதியது.லாரி மோதிய வேகத்தில் வேன் நிலைதடுமாறியது. இதில் வேனில் இருந்த 5 மாணவர்கள் காயமடைந்தனர்.விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
காயமடைந்த மாணவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, விபத்து நடந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
English Summary
School van collides speeding lorry Angry public suddenly blocks national highway