மனைவி பிரிந்து சென்ற சோகம்...! வள்ளியூரில் ரயிலில் பாய்ந்து தனியார் நிறுவன காவலாளி தற்கொலை...!
Sadness over wife separation Private company security guard commits suicide by jumping under train Valliyur
மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மனவேதனையில் இருந்த தனியார் நிறுவன காவலாளி, ரெயில் முன் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் வள்ளியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் காலையில் இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே, காவலர்கள் நடத்திய விசாரணையில், காயங்களுடன் மீட்கப்பட்டவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரெனால்டு (38) என்பது தெரியவந்தது. அவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்ததும், திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
ரெனால்டுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில், ரெனால்டை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் மனவேதனையில் இருந்து வந்த ரெனால்டு, சம்பவத்தன்று வள்ளியூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாய்ந்ததாக காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்த ரெனால்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி பிரிந்த வேதனையில் காவலாளி ரெயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sadness over wife separation Private company security guard commits suicide by jumping under train Valliyur