த.வெ.க. ஆட்சி நீடித்தால் தமிழ்நாடு ரூ.20 லட்சம் கோடி கடன் சுமையில் மூழ்கும்...! - இ.பி.எஸ். கடுமை விமர்சனம்
If TDP government continues Tamil Nadu will be drowning debt burden 20 lakh crore EPS Harsh Criticism
“மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை களமிறக்கி வெற்றி பெறுவோம்” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், த.வெ.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு த.வெ.க.தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள த.வெ.க. முயற்சி செய்வதாகவும், ஆட்சி அமைக்க தேவையான பலம் இல்லாததால் அ.தி.மு.க.வினரை தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சிகள் தற்போது எதிர்ப்பு மனநிலைக்கு மாறியிருப்பதால், அ.தி.மு.க.வினருடன் அந்தக் கட்சியினர் தொடர்பு கொண்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

த.வெ.க. ஆட்சியில் நடைபெற்றுவரும் குறைபாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும்போது, அதற்கு உரிய பதில் அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.“நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து மானியக் கோரிக்கைகள் வரையிலான விவாதங்களில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி சட்டசபையின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை. எந்தக் கேள்வி எழுப்பினாலும் மூன்று அமைச்சர்களே தொடர்ந்து பதில் அளிக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை தற்போது மீண்டும் எடுத்துப் பேசுவதன் மூலம் அவையின் நேரம் வீணடிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.தாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஆளுங்கட்சியினர் தங்களது தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.“நான் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை. இணையவழி வர்த்தக முதலீட்டு மோசடி தொடர்பாக நான் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை.
காவலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.த.வெ.க. ஆட்சி செயலிழந்த ஆட்சியாகவே இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகளே விமர்சனம் செய்யும் அளவுக்கு நிலைமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.ஊழலை ஒழிப்பதாக த.வெ.க. அரசு கூறிவரும் நிலையில், அந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழல் அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்யும் அளவுக்கு ஊழல் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“லஞ்ச ஒழிப்புத்துறை எல்லா ஆட்சிக் காலங்களிலும் செயல்பட்டுதான் வந்துள்ளது. ஆனால், த.வெ.க. ஆட்சியில் மட்டும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெறுவது போன்று காட்சிப்பதிவுகளை வெளியிடுகின்றனர்” என்றும் அவர் விமர்சித்தார்.முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைக்கு மற்றொரு அமைச்சர் பதிலளிக்கும் நிலை இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இனியாவது முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் உள்ள துறைகளை முறையாகக் கண்காணித்து, அதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரி படுகை மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நெல் கொள்முதல் செய்யப்படாததால், மழையில் நெல்மணிகள் நனைந்து சேதமடையும் நிலை உருவாகியுள்ளதாகவும், விவசாயிகள் கடும் உழைப்பில் விளைவித்த நெல் மூட்டைகளை அரசு உரிய முறையில் கொள்முதல் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால், தற்போது உள்ள ரூ.10 லட்சம் கோடி கடன் ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
“ஏற்கனவே அரசு கடன் சுமையில் இருக்கும் நிலையில், தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவிக்கின்றனர். இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வருவாய் எங்கிருந்து கிடைக்கும்? அதிகரிக்கும் கடனை இறுதியில் யார் சுமக்க வேண்டும்? மக்களின் வரிப்பணம்தானே அந்தக் கடனை அடைக்க பயன்படுத்தப்படும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
English Summary
If TDP government continues Tamil Nadu will be drowning debt burden 20 lakh crore EPS Harsh Criticism