பகீர் கொள்ளை...இனி கம்பி எண்ண வேண்டியதுதான்...! வீடு புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு நேர்ந்த கதி என்ன...?
robbery What happened robbers who broke into house and stolen jewelry
திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகேயுள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் சர்னித் (30). இவரது வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி நள்ளிரவு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
அப்போது, 2 பேர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கத்தியை காட்டி சர்னித்தின் குடும்பத்தினரை மிரட்டினர். பின்னர், சர்னித்தின் தாயார் வசந்தி அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர்.இதனை தடுக்க துணிச்சலுடன் முயன்ற சர்னித்தை அந்த மர்மநபர்கள் கடுமையாக தாக்கினர். தொடர்ந்து நகையை பறித்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விருவீடு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கண்ணார்பட்டியை சேர்ந்த சண்முகம் (45), தேனி மாவட்டம் பெரியகுளம் செம்மண்குழி பகுதியை சேர்ந்த செல்லமுத்து (32) ஆகியோர் இந்த நகை பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி கணேசன் விசாரித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குற்றவாளியான சண்முகத்துக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செல்லமுத்துவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.இந்த தீர்ப்பு நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
English Summary
robbery What happened robbers who broke into house and stolen jewelry