“ஆலுமா டோலுமா வெளியே வரவே கூடாது என நினைத்தேன்” – அனிருத் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அவர், தற்போது ‘ஜெயிலர் 2’, ‘தர்மன்’ உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு அவர் இசையமைத்த பல படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ஹிட்டாக, குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

அனிருத்தின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அவரது இசை குறித்து விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ஒரே மாதிரியான இசையை வெவ்வேறு படங்களில் பயன்படுத்துவதாகவும், பாடல்களில் வரிகளை விட இசை மற்றும் சத்தத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள் மத்தியில் அவரது இசைக்கு இருக்கும் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடல் குறித்து அனிருத் பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் படங்களுக்கு மாஸ் பாடல்கள் அமைவது குறித்து பல்வேறு கருத்துகள் இருந்த நிலையில், ‘வேதாளம்’ படத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்த அந்தப் பாடல், இன்றளவும் பிரபலமாக உள்ளது.

ஆனால், அந்தப் பாடல் உருவானபோது தனக்கு அதன் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என அனிருத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, “ஆலுமா டோலுமா பாடல் வெளியாவதையே நான் விரும்பவில்லை. அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு முதல் நாள் இரவு இயக்குநரை அழைத்து, ஷூட்டிங்கை தள்ளிப்போடும்படி கேட்டுக்கொண்டேன். இந்தப் பாடல் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகாது என்று நினைத்தேன். குறிப்பாக அஜித் ரசிகர்கள் இந்தப் பாடலை விரும்ப மாட்டார்கள் என்றும் எனக்குத் தோன்றியது” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இயக்குநரும் படப்பிடிப்பை தள்ளிவைப்பதாக கூறியதாக அனிருத் தெரிவித்துள்ளார். ஆனால் அதன்பிறகு பாடல் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் இயக்குநருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் அஜித்திடம் தொலைபேசியை கொடுத்ததாகவும் அனிருத் கூறியுள்ளார். அப்போது அஜித் பாடலைக் கேட்டுவிட்டு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அதற்குப் பிறகு சந்தோஷத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று அனிருத் தெரிவித்துள்ளார்.

பாடல் வெளியாகும் முன்பே அது வெற்றி பெறாது என நினைத்த அனிருத்துக்கு, அஜித்தே பாடலை ரசித்ததாக தெரிவித்த சம்பவம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இன்று ‘ஆலுமா டோலுமா’ அஜித்தின் முக்கியமான மாஸ் பாடல்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I didnot want Aaluma Doluma to be released Anirudh shares an interesting detail


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->