எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அடுத்தகட்ட திட்டம் இல்லையா? தங்கமணி திடீர் ‘யூ-டர்ன்’ பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு அடுத்தகட்டமாக செயல்படுத்துவதற்கான வலுவான திட்டம் எதுவும் இல்லாததால் தங்கமணி அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் இருந்து தங்களுக்கு பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோரின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இதுவரை அதற்கு சாதகமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் சட்டப்பேரவையிலும் வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், வேலுமணி அணியில் முக்கியமானவராக இருந்த தங்கமணி தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அந்த அணிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வேலுமணி தரப்பினர் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தங்கமணி மட்டும் சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை பாராட்டிப் பேசியதாக கூறப்படுகிறது. இதுவே அவரது நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து அரசியல் ரீதியாக மோதலை முன்னெடுத்துச் செல்லும் அளவுக்கு வேலுமணி தரப்பிடம் அடுத்தகட்ட திட்டங்கள் இல்லை என்றும், அதற்குத் தேவையான பொருளாதார மற்றும் அமைப்பு ரீதியான வலிமையும் போதுமானதாக இல்லை என்றும் தங்கமணி கருதியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், தங்கமணிக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நீண்டகால நெருக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக மின்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஏற்பட்ட இந்தத் தொடர்பு தற்போதும் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பின்னணியில், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிடத்தின் ஆதரவு தொடர்ந்து இருப்பதாக தங்கமணிக்கு தகவல் கிடைத்திருக்கலாம் என்றும், அதனாலேயே அவர் வேலுமணி அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமான நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் எஸ்பி வேலுமணி–சிவி சண்முகம் அணிக்கு தங்கமணியின் விலகல் மேலும் பின்னடைவாக அமைந்துள்ளதாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there no plan for the next phase of action against Edappadi Palaniswami What is the story behind Thangamani sudden U turn


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->