#தமிழகம் | பிடித்து கொடுத்த திருடனை, தப்பிக்கவிட்ட போலீசார் - காவல்நிலையம் முற்றுகை!
Ranipet Banavaram police thief escape
ராணிப்பேட்டை மாவட்டத்தில், பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்ட திருடனை போலீசாரே அலட்சியத்தால் தப்பவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அரசு மருத்துவமனை அருகே சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி ஒன்று அமைந்துள்ளது.
இதில் கூலி வேலை செய்யும் ஏழுமலை என்பவரின் வீட்டில், சம்பவம் நடந்த நேற்று மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைவதற்காக நோட்டமிட்டு கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த ஏழுமலையின் மகன், அந்த மர்ம நபரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் வரவே, அந்த மர்ம நபர் உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பி சென்று, ஒரு புதரில் மறைந்து கொண்டார்.
இதனை அடுத்து மர்ம நபரை நீண்ட நேரம் தேடிய மக்கள் குடியிருப்பு வாசிகள், ஒருவழியாக அவனைப் பிடித்து கை கால்களை கட்டி போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வந்த போலீசார், அந்த மர்ம நபரின் கைகால்களை கட்டவிழ்த்துவிட்டு விசாரணை மேற்கொண்டார்.
போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே, அந்த மர்ம நபர் திடீரென ஒரே ஓட்டமாக ஓட்டம் எடுத்து, தப்பி தலைமறைவாகினர்.
இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
English Summary
Ranipet Banavaram police thief escape