மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்ட விவகாரம்! பாய்ந்தது வழக்கு!
Ramanadhapuram Minister MP Collector issue police case file
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கு மக்களவை உறுப்பினரான நவாஸ் கனி வரவில்லை என்று கூறப்படுகிறது. தாமதம் ஆன காரணத்தால் விழாவை தொடங்குமாறு ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நிகழ்ச்சிக்கு நவாஸ் கனி எம்.பி. வந்துள்ளார்.

தான் வருவதற்கு முன்பே நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் நவாஸ் கனி எம்.பி. மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் – நவாஸ் கனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி இருவரும் கோபமாக கைகளை நீட்டி பேச தொடங்கியுள்ளனர். இதனை கண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் நவாஸ்கனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை சமாதனப்படுத்த முயற்சித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை அவர்கள் கீழே தள்ளி விட்டனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆட்சியர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட எம்.பி நவாஸ்கனியின் உதவியாளர் விஜயன் மீது கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
Ramanadhapuram Minister MP Collector issue police case file