நூதன கொள்ளை: குறி சொல்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் செயின் அபேஸ்...! நடந்தது என்ன...?
Novel robbery Old woman pretended fortune teller and stole 3 pounds chain What happened
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றிய தனிக்கொடி, இவருடைய மனைவி பாப்பா (70), சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்து, வீட்டு முகவரியை விசாரிப்பது போல நடித்து பாப்பாவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய அந்த நபர், “உங்கள் வீட்டில் செய்வினை மற்றும் தீய சக்தி கோளாறு உள்ளது. உடனே பரிகாரம் செய்ய வேண்டும்” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை உண்மையென நம்பிய பாப்பாவிடம், செம்பில் தண்ணீர் எடுத்து வருமாறு அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் வீட்டிற்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து, “கழுத்தில் இருக்கும் தங்கச்சங்கிலியை கழற்றி அந்த தண்ணீரில் போடுங்கள். அப்போதுதான் தோஷம் நீங்கும்” என்று மர்ம நபர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் ஏமாற்று வலையில் சிக்கிய பாப்பா, தான் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி செம்பில் போட்டுள்ளார்.
சில நொடிகளில் திடீரென பாப்பாவை தள்ளிவிட்டு, செம்புடன் தங்கச்சங்கிலியையும் அபகரித்த அந்த நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பா, கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நகையை பறித்துச் சென்ற மர்மநபர் மோட்டார்சைக்கிளில் தப்பியோடும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த காட்சிகளை கைப்பற்றிய காவலர்கள், மர்மநபரை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Novel robbery Old woman pretended fortune teller and stole 3 pounds chain What happened