நீலகிரியில் மைனஸ் 5 டிகிரி…! பனிப்பொழிவு உச்சம், தேயிலை தோட்டங்கள் பாதிப்பு...!
Nilgiris temperature dropped minus 5 degrees snowfall peak affecting tea plantations
நடப்பாண்டில் நீலகிரி மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக பதிவாகி வருகிறது. பனிக்காலம் தொடங்கிய சில நாள்களிலேயே கடும் உறைபனி தாக்கம் காணப்படுவது, விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
ஊட்டி நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த நிலையில், தலைகுந்தா, அவலாஞ்சி போன்ற உயரமான பகுதிகளில் மைனஸ் 5 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது.

இதன் விளைவாக, ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் புல்வெளிகள், வாகனங்கள் மற்றும் கூரைகள் மீது வெள்ளை போர்வை போர்த்தியதுபோல் உறைபனி படர்ந்து காணப்பட்டது.உறைபனியால் உள்ளூர் மக்கள் அன்றாட வாழ்வில் சிரமம் அடைந்தாலும், சுற்றுலா பயணிகள் இந்த குளிர் சூழலை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த கடும் பனிப்பொழிவு தேயிலைத் தோட்டங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேயிலை செடிகள் கருகி, இயல்பான வளர்ச்சி தடைபட்டுள்ளது. குறிப்பாக, இளம் தண்டு மற்றும் இளம் இலைகளை தாக்கும் ‘கொப்புள நோய்’ பரவலாக காணப்படுவதால் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது.
முன்னதாக, 2020-க்கு முன் ஆண்டுகளில் பனிப்பொழிவால் 3,700 முதல் 4,900 ஏக்கர் வரை தேயிலைத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. 2021–22 ஆம் ஆண்டுகளில் பனிப்பொழிவு குறைந்ததால், பாதிப்பு 1,200 ஏக்கர் வரை மட்டுப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 10,000 ஏக்கர் பரப்பளவில் பசுந்தேயிலை பயிர்கள் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கூறுகையில்,தேயிலைத் தோட்டங்களில் அதிக நிழல் தரும் சில்வர் ஓக் மரங்களின் கிளைகளை அகற்றுவதும், கொப்புள நோயால் பாதிக்கப்பட்ட இலைகளை உடனடியாக நீக்குவதும் நோய் பரவலை கட்டுப்படுத்த உதவும் என அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Nilgiris temperature dropped minus 5 degrees snowfall peak affecting tea plantations