சபரிமலை தங்கம் திருட்டு மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட சதி; கேரள உயர்நீதிமன்ற எஸ்ஐடி அறிக்கை தாக்கல்..!
The Kerala High Court-appointed SIT has filed a report stating that the Sabarimala gold theft was a planned conspiracy
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 2019-இல் புனரமைப்பு பணிகள் நடந்தன. அப்போது கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது துவார பாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து 04 கிலோ தங்கம் மாயமானதும், கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. குறித்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தங்கம் திருட்டு திட்டமிடப்பட்ட துல்லியமான சதி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சபரிமலையில் நடந்த தங்கம் திருட்டு நன்கு திட்டமிடப்பட்ட சதி. குற்றம்சாட்டபட்டவர்கள் கருவறையில் இருந்து மீதம் உள்ள தங்கத்தையும் திருட திட்டமிட்டு இருந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், துவார பாலகர் சிலைகள், ஏழு பகுதி கதவு மற்றும் கருவறையின் தங்க முலாம் ஆகியவற்றில் இருந்து தங்கத்தை திருட சதித்திட்டம் தீட்டப்பட்டது.
ஸ்மார்ட் கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய சங்கர், கதவில் இருந்து 409 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்தார் என்றும், பின்னர் அந்த தங்கம் பெல்லாரியைச் சேர்ந்த தங்க வியாபாரி கோவர்தனிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோசடி வெளிச்சத்துக்கு வந்த பிறகு, உயர்நீதிமன்றம் தலையிட்டது என்றும், இந்தக் காலகட்டத்தில் தான் மூன்று முக்கிய குற்றவாளிகள் பெங்களூருவில் சந்தித்தனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மொபைல்போன் டவர் தரவுகளின் படி, முதல் குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தி, பத்தாவது குற்றவாளியான பங்கஜ் பண்டாரி மற்றும் கோவர்தன் ஆகியோர் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருவில் சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டால் அல்லது அவர்கள் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூன்று பேரும் விவாதித்துள்ளனர். அவர்கள் ஆதாரங்களையும் அழிக்க முயன்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
The Kerala High Court-appointed SIT has filed a report stating that the Sabarimala gold theft was a planned conspiracy