டான்டீ நிர்வாகம் மூடுவது குறித்து பாஜக சார்பில் மாபெரும் போராட்டம்.!
near neelagiri bjp strike for Dandee Administration close
இலங்கையில் இருந்து மீட்டு வரப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், அவர்கள் அனைவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதரத்திற்காக டான்டீ நிர்வாகமும் உருவாக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அந்த தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு இல்லாத தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு தோட்ட கழகம் வனத்துறைக்கு ஒப்படைத்ததுடன், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களது வீடுகளை காலி செய்யும்படி நோட்டீசும் ஒட்டியுள்ளது.
மேலும், தமிழ்நாடு தோட்டக் கழகத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கு தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. மாநில அரசின் இந்த தீவிர முடிவால் இந்த தொழிலை நம்பி இருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க சார்பில் வால்பாறையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, டான்டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகள் ஆக்குவதை கண்டித்தும் பா.ஜ.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
அந்த அறிவிப்பின் படி, இன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம் கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இவருடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர். இதற்காக கூடலூர் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு, தீவிர சோதனையும் நடைபெறுகிறது.
English Summary
near neelagiri bjp strike for Dandee Administration close