மூதாட்டி கொலை வழக்கு..மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு!
Murder case of the old woman 4 special teams set up to catch the suspects
தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க பரமத்திவேலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமியாத்தாள் என்பவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது கணவர் ராசப்பன் இறந்துவிட்டார். விவசாயம் பார்த்துக் கொண்டு சாமியாத்தாள் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் கட்டில் போட்டு படுத்து தூங்கியுள்ளார்.அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், சாமியாத்தாளை தட்டி எழுப்பி கத்தியை காட்டி வீட்டைத் திறந்து நகை -பணத்தை எடுத்துக் கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.இதனால் பயந்து போன சாமியாத்தாள் கூச்சலிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், சாமியாத்தாள் கழுத்து மற்றும் வாய் பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சாமியாத்தாள்
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த்தபோது பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க பரமத்திவேலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக தோட்டத்து வீட்டிற்கு செல்லும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Murder case of the old woman 4 special teams set up to catch the suspects