ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் : முதுமலை புலிகள் காப்பகத்தில் 15 பன்றிகள் உயிரிழப்பு.!
mudumalai sanctuary fifteen pigs died for african swine flu
நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அருகருகே அமைந்துள்ளன. இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இதையறிந்த கர்நாடக வனத்துறையினர் பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து, அவற்றை இந்திய கால்நடை ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த பரிசோதனையில், பன்றிகள் அனைத்தும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இந்த நோய் மேலும் பரவாத வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பந்திப்பூர் புலிகள் காப்பகத்துடன் முதுமலை புலிகள் காப்பகமும் இணைந்து அமைந்துள்ளதால், இந்த காப்பகத்திலும் பன்றிகள் அதிகளவு இறந்துள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில், சமீபத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பதினைந்து காட்டுப்பன்றிகள் இறந்தது தெரியவந்தது. அதன் படி, அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு இந்திய கால்நடை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டு அங்கிருந்து வரும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இருந்தாலும், இந்த பன்றிகளும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் இறந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நோய் மனிதர்கள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு பரவுவது குறித்த தகவல் இல்லை என்றாலும், பன்றிகளுக்கு அதிகம் பரவக்கூடிய சூழல் உள்ளது.
இதன் காரணமாக பந்திப்பூர் மற்றும் முதுமலை பகுதிகளில் காட்டு பன்றிகளின் எண்ணிக்கை அதிகளவு குறைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வனத்துறை இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், "நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் இறப்பு இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவற்றை உரிய வழிமுறைகளை பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும்" என்று வனச்சரகர்களுக்கு, வனத்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
mudumalai sanctuary fifteen pigs died for african swine flu