அதிமுகவில் 25க்கும் மேற்பட்ட அணிகள்..உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
More than 25 factions in AIADMK Udhayanidhi criticizes Stalin
அதிமுகவில் இன்று 25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
துணை முதல்-அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் , இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகளை சந்தித்தார். கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் வளர்ச்சியும் சாதனைகளும் தமிழ்நாட்டின் முதல் -அமைச்சர் ஒவ்வொரு தொகுதியையும் பார்த்துப் பார்த்து செயல்படுவதால், இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் டபுள் டிஜிட் அடைந்து,
தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைப் பிடிக்காத மத்திய பாஜக அரசு, இங்குள்ள "அடிமைகளுடன்" சேர்ந்து பல சதிகளில் ஈடுபடுகிறது. மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளை 32 தொகுதிகளாகக் குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர முயன்றபோது, குறுக்கு வழியில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டிற்குள் நுழைக்கவும், குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவரவும் முயன்றது.
இதற்கு முதல்-அமைச்சர் "நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், தமிழ்நாட்டிற்குள் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பையும், குலக்கல்வி திட்டத்தையும் மீண்டும் அனுமதிக்க மாட்டேன்" என்று சட்ட போராட்டத்தின் மூலம் நம்முடைய கல்வி உரிமை வென்று, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை அளித்தது.
"தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று திமுக பேசினால், கவர்னர் ஆர்.என். ரவி "யாரோடு போராடப் போகிறீர்கள்? யாரை வெல்லுவீர்கள்?" என்று கேட்கிறார்.
அதிமுகவில் இன்று இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி அணி, செங்கோட்டையன் அணி என 25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன. திருச்சியில் மட்டும் மூன்று அணிகள் தனியாக இயங்குகின்றன.
எடப்பாடி பழனிசாமி காரை மாற்றுவதும், காலை மாற்றுவதும் அவருக்கு ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதாவின் கால், சசிகலாவின் கால், டிடிவி தினகரனின் கால், இப்போது நிரந்தரமாக மோடியின் காலில் சரணடைந்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் இன்று அவரை செல்லமாக "முகமூடி பழனிச்சாமி" என்றுதான் அழைக்கிறார்கள்.
திராவிட மாடல் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 10,000 முகாம்கள் என்ற இலக்கில், 8000 முகாம்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, இதுவரை 18 லட்சம் மனுக்களில் 12 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு மாநில அரசும் செய்யாத சாதனை.
தலைவர் அவர்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் இதே உணர்வோடு களத்தில் நின்று பிரசாரத்தில் ஈடுபட்டால், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக அணி நிச்சயமாக வென்று காட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
More than 25 factions in AIADMK Udhayanidhi criticizes Stalin