அலங்காநல்லூரில் நிறைவேற்றப்பட்ட முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி! களத்தில் தி.மு.க அமைச்சர்கள்!
minister ground in Alanganallur
மதுரை மாவட்டம்: அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவிக்கையில்; ''முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து நான்கு முறையாக மைதான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன். பணிகள் முழுவதுமாக இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும்.
தற்போது மைதான நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல் தரை, குடிநீர் வசதி, வீரர்கள், உரிமையாளர்கள் ஓய்வு அறை, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 35 சதவீதம் கட்டிட பணிகள் முடிவு பெற்ற நிலையில் தற்போது தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மைதானத்திற்கு விரைந்து வருவதற்காக புதிய சாலைகள் அமைக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் தி.மு.க. அரசை பாராட்டி கொண்டும் மறுபுறம் எதிர்க்கட்சிகள் விமர்சனம் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை'' என்று, தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
English Summary
minister ground in Alanganallur