#விருதுநகர் || பாரத மாதா சிலை விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
MaduraiHC ordered collector to answer regarding Bharat Mata statue removal from BJP office
விருதுநகர் மாவட்டம் சூறைக்குண்டு மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பாஜக மாவட்ட அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நாட்டா கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் விருதுநகர் பாஜக அலுவலகத்தில் இதர கட்டிட பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மிக பிரம்மாண்டமான கொடி கம்பம் பாஜக அலுவலகம் வாயிலில் அமைக்கப்பட்டது.
அந்த கொடி கம்பத்தின் கீழே கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பாரதமாதா சிலையை பாஜகவினர் நிறுவினர். ஆனால் அந்த சிலை உரிய அனுமதி பெற்று வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா சிலையை அகற்ற முயன்றனர்.

அப்போது பாஜக அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவியது. பாஜகவினர் வருவாய் துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாரத மாதா சிலை அமைக்க உரிய அனுமதி பெறும் வரை அதனை மூடி வைக்குமாறு வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தலை ஏற்று பாஜகவினர் சிலையை மூடி வைத்தனர்.

இந்த நிலையில் அன்று இரவு 12 மணிக்கு மேல் பாஜக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த வருவாய் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி விருதுநகர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். உரிய அனுமதி பெற்ற பிறகு சிலை திரும்ப ஒப்படைக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவினர் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பாரத மாதா சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
English Summary
MaduraiHC ordered collector to answer regarding Bharat Mata statue removal from BJP office