மதுரையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவன்!
madurai gun fire
மதுரை நகரத்தில் நடந்த துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10-ம் வகுப்பு மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதுரை கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வடிவேல். இவர் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கிருத்திகா, மகன் யுவன் (15) 10-ம் வகுப்பு மாணவன். மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த யுவன், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்ற சிறந்த துப்பாக்கிச் சுடுபவர்.
சில நாட்களாக வீட்டில் பெற்றோருடன் சிறிய தகராறுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை பெற்றோர் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், யுவன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஏர்கன் துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை நேரத்தில் வீடு திரும்பிய பெற்றோர், யுவன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியில் மூழ்கினர். உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கே.புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். யுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பக்கட்ட விசாரணையில் யுவன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
தேசிய அளவிலான திறமையான துப்பாக்கிச் சுடுபவரின் தற்கொலைச் செய்தி மதுரை முழுவதும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.