ஈரானியக் கப்பலை சிறைபிடித்துள்ள அமெரிக்கா; ஈரானுக்கு ஆயுதத் தொழில்நுட்பங்களை சீனா வழங்கியுள்ளதா..?
US Seizes Iranian Vessel
ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமான் வளைகுடாவில் உள்ள சாபஹார் துறைமுகத்திற்கு அருகே ஈரானியக் கப்பல் 'தௌஸ்கா' அமெரிக்கக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட விவகாரம், சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, ஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் போன்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திய-அமெரிக்கத் தலைவரான நிக்கி ஹேலி வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, இந்தக் கப்பல் சீனாவிலிருந்து வந்துகொண்டிருந்ததாகவும், இதில் ஏவுகணைகள் தயாரிப்பதற்குத் தேவையான அபாயகரமான இரசாயனப் பொருட்கள் மற்றும் பாகங்கள் இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கக் கடற்படை பலமுறை எச்சரித்தும் கப்பல் பணியாளர்கள் ஒத்துழைக்காததால், அது வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்டதாகத் கூறப்படுகிறது. இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு வட்டாரங்களின் முதற்கட்ட விசாரணையில், கப்பலில் 'இரட்டைப் பயன்பாட்டு' பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இவை பொதுவாகத் தொழில்துறைக்குத் தேவைப்படுபவை போலத் தோன்றினாலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட ஆயுதத் தயாரிப்பில் பயன்படுத்தப்படக்கூடிய உலோகங்கள், குழாய்கள் மற்றும் மின்னணு பாகங்கள் என கூறப்படுகிறது.
இது ஈரானின் இராணுவப் பலத்தை அதிகரிக்க சீனா மறைமுகமாக உதவுகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனாலும், இந்தச் செயலை "ஆயுதமேந்திய கடற்கொள்ளை" என்று ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.
அதேநேரம், கப்பலில் இருந்த பணியாளர்களின் பாதுகாப்பைக் கருதி ஈரான் தற்போது நிதானம் காப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன், ஒட்டுமொத்தமாக, இந்தச் சம்பவம் ஈரான்-அமெரிக்க உறவை மட்டுமல்லாமல், அமெரிக்கா-சீனா இடையிலான உறவையும் கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஈரானுக்கு ஆயுதத் தொழில்நுட்பங்களை சீனா வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டால், சர்வதேச அரங்கில் சீனா மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம் உலக நாடுகளை தற்போது உற்று நோக்கச் செய்துள்ளது.