ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்; இணை உரிமையாளராக இணைந்துள்ள கிறிஸ் கெய்ல்..!
Chris Gayle joins the European T20 Premier League as a co owner
ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் (ETPL) வரும் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இதில் கிளாஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், எடின்பர்க், டப்ளின், பெல்பாஸ்ட், ரோட்டர்டாம் நகரங்களை மையமாகக் கொண்டு 06 அணிகள் பங்கேற்கவுள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ முகாஃபியன்ஸ் அணிக்கு முகாஃபி குரூப், தன்ஷா பத்ரா உரிமையாளர்களாகவும், கிறிஸ் கெய்ல் இணை உரிமையாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார்.
இந்தியாவின் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் பல டி20 பிரான்சைஸ் கிரிக்கெட் லீக் தொடர்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அந்தவகையில், ஐரோப்பாவில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கும் வகையில் ஐசிசியின் அங்கீகாரம் பெற்று ஐரோப்பிய டி20 (European T20 Premier League - ETPL) பிரீமியர் லீக் புதியதாக தொடங்கப்படவிருக்கிறது.
இதில், ஸ்காட்லாந்தை பிரதிநிதித்துவம் படுத்தும் கிளாஸ்கோ நகரை மையமாக கொண்டு விளையாடவிருக்கும் கிளாஸ்கோ முகாஃபியான்ஸ் அணிக்கு முகாஃபி குரூப் நிறுவனம் பங்குதாரராகவும், தன்ஷா பத்ரா உரிமையாளராகவும் செயல்பட உள்ளது. இந்த அணியின் இணை உரிமையாளராக நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் இணைந்துள்ளார். மேலும் இத்தொடரின் பிராண்ட் அம்பாசிட்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கெய்ல் பேசுகையில் கூறியதாவது; ''கிளாஸ்கோ முகாஃபியன்ஸ் அணியின் இணை உரிமையாளர் பொறுப்பை ஏற்பதன் மூலம், எனக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயம் தொடங்குகிறது. நம்பிக்கைக்குரிய உள்ளூர் திறமைகளைக் கண்டறிந்து, அப்பகுதியில் விளையாட்டை வலுப்படுத்தும் எதிர்கால நாயகர்களை வளர்க்கும் ஆற்றல் ETPL-க்கு உள்ளது. இந்தப் புதிய பயணத்தைத் தொடங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.'' என்று கூறியுள்ளார்.
English Summary
Chris Gayle joins the European T20 Premier League as a co owner